Thursday, November 3, 2011

கீச்சுக்களின் குசுகுசுப்பு 2

எப்போதும் கண்ணுக்குள் எனக்காக காத்திருக்கும் தூக்கம் எங்கு தவறிவிழுந்ததோ தெரியாது தேடிக்கொண்டிருக்கிறேன் இன்னமும்...


இருக்கும் கணங்களில் இருந்து தாவி முடிந்த தருணங்களின் மேலேயே மேய்கிறது மனது..

இசையில் புத்தகங்களில் இருக்கும் வகைமை வாழ்விலும் மனிதர்களிலும் இருக்கும் போல.இத்தனை பயணப்பட்டும் மனிதர்கள் இன்னும் புதிராகவே தெரிகிறார்கள்

சிரிப்பும் நிறமும் சேர்ந்து குழையும் கனவுகளில் மத்தியில், மிருதுவான குளிரோடு ஒற்றை பனித்துளியாய் இறங்கி நெகிழவைக்கிறாய் தோழா..

Friday, October 21, 2011

இச்சை குளம்!!!

தூக்கங்களின் துளிகள் சொட்டியபடியே இருக்கிறது!
முகங்களில் நடுவே இருந்த கண்களும் கரைந்து வழிகிறது!
குவியும் துளிகள் திரண்டு ஓடையாகி,
என்றோ எழுதிய கவிதை போன்ற ஏதோ ஒன்றின் மேடு பள்ளத்தில்
விழுந்தும் புரண்டும் சிதறி சேர்கிறது அவளுக்குள்!
குளத்தின் உள் அவள் தெரிகிறாள் எப்போதாவது காணல் போல்!

பறந்து திரியும் காதல்கள் சிறகை நீட்டியபடியே மிதக்கிறது!
அவள் உடம்பின் உள்ளிருந்து முளைக்கும் மரக்கிளைகளில்
அவ்வப்போது அமர்ந்து சிறகை மடக்கி சாறலில் இருந்து ஒதுங்கி
அவளுடைய பழங்களை கொத்தியும், அளகை கூறாக்கியும்,
அவள் இலைகளில் எச்சமிட்டும் வாழ்க்கையை ஓட்டிக்கொள்கிறது!

கண்கள் கரைந்து எழுத்துக்களோடு ஓடி நிறைந்ததில் தளும்பும் குளம்!
அலையும் அவள் உடல் முழுக்க பூஞ்சை போல கண்கள்
ஒட்டிவளர்ந்து அசைந்தப்படி நிற்கிறது!
அதன் வழியே சுவாசிக்கிறாள்! ருசிக்கிறாள்!
குளத்தில் கரையும் தூக்கத்தோடு இச்சையும்
துளித்துளியாய் கலக்கிறது இப்போதெல்லாம்!

வெகு நாள் ஆசை அவளுக்கும்..
தன் முகம் எப்படி தான் இருக்கும் என்பதை கண்டுவிட!
நீரின் ஆழத்தில் அவள் பிம்பம் பிரதிபலிப்பதே இல்லை..
வெளிச்சமும் இருட்டும் இல்லாத வெளியாதலால்!
பச்சையும் கசப்பும் காமமும் கலந்த நீரில் முங்கி கரைந்தே போகிறாள்!

வரைகிறேன் என்று வந்து தூரிகையில் அவள் முகத்தை
அடைத்து வைப்பவர்களுக்கும் தெரிவதே இல்லை
எது அவள் கண்கள் உண்மையில் என்று!!

Saturday, August 27, 2011

நான் எனும் ஏதோ ஒன்று!!!

உன்னை நான் எங்கும் பார்த்ததில்லை!
பார்ப்பேன் என்று நினைத்தப்பிறகு வந்தாய்
நான் எண்ணிய நீ என எண்ணிக்கொண்டிருந்தேன்!
உன் முகம் போன்ற ஒரு முகம் என் நினைவில்
உன் பேச்சும் பார்வையும் கூட அது போலவே!
ஆனால் நான் எண்ணிய நீயாக நீ இல்லை
இன்றைகளுக்குள்ளும் நாளைகளுக்குள்ளும்
புகுந்துதேடிக்கொண்டே இருக்கிறேன்
உனக்குள் நான் எண்ணிய நீயை!
மெதுவாக உருளும் நேரத்தின் கொலையில்
வடிந்து கரையும் தெளிவிற்குள் உணர்வது
நீ என்பது நான் எண்ணிய உருவமே!
நீ என்பது நான் எண்ணிய உள்ளமில்லை என்று!
உன் முடிவுகள் என்னை சுற்றியே வட்டமிட்டு
ஊர்ந்தபடியே என்னையும் ஆழ்ந்து நடுகிறது!
உரமாக என்னையே தெளித்து
விதையாக என்னையே நட்டு
தண்ணீராக என்னையே பாய்ச்சி
வளர்வேனா என்று பார்த்து நிற்கிறது
உன் குறிக்கோள்கள்!
உன்னால் என் கோபவேர் வெயில் பட்டு தழைத்து தரையிலும்
உனக்கு பயந்து என் காய்ந்த இலைகள் பூமிக்குள் நெளிகிறது!
இப்படி நான் எனும் ஏதோ ஒன்றை
தழைத்து வளர்கிறேன்
உன் கேள்விகளையும் என் மௌனங்களையும்
தாங்கியபடி!

Tuesday, August 9, 2011

கீச்சுகளின் குசுகுசுப்பு!!!


சட்டென பொங்கி அடங்கும் கோபங்களை எங்கு கொண்டு கொட்டுவது என்று தெரியாது போகிறது...

வாழ்க்கையில் எல்லாமே expiry date உடன் தான் வருகிறது. அது பொருளோ, உயிரோ, உணர்வோ எதுவானாலும் சரி!

கூடவே இருந்து குப்பை கொட்டும் மனைவியை விட கண்முன் தோன்றி மறையும் காதலிகள் வினோதமாக தெரிகிறார்கள். Guess the mystery get lost with wives.

பல வேளைகளில் கானலை தேடித்தான் தொலைகிறோம்...

என் விழிப்புக்கும் உறக்கத்திற்கும் இடையே முள்ளாய் நிற்கிறாயே