Sunday, December 13, 2009

முத்தப்பட்டறை!!!



முன்பு காத்திருந்தேன்...
அண்டவெளியை போல் பரந்து விரிந்த முகப்புகள் முன்பு
மின்மினிப்பூச்சிகள் பறக்கும் நேரத்தில்
விழித்திருந்தேன்...

என் கன்னக்கதுப்புகள் காய்ந்த போது
முகப்பில் செம்பு தூண்கள் மின்னியது....
சொர்க்கத்தின் வாயிலோ அது...
தெரியாது அமர்ந்திருந்தேன்!

என் அமைதியை வேண்டி நிற்கும் நொடி
உன் உளைக்கலம் என் கண் முன்...
என் முத்த அச்சுக்கள் சுமந்த உலோகம்
சம்மட்டியில் அடிவாங்க
கொதிக்கும் சிகப்பு நெருப்பாய் உன் மூச்சுக்காற்று...
அச்சாகும் முத்தங்கள் அதில் மெதுமெதுவாய் காய்ந்து...

தேவதைகளின் தோட்டத்தில்
வளரும் சிணுங்கல் விட்டத்தை நோக்கி...
தேடி தேடி காண இயலா
எத்தனை இடங்களில் உனக்கான
முத்தங்களை ஒளித்து வைக்கிறேன்...

ஒளித்து வைக்கும் முத்தச்சருமம்
கனன்று காட்டிக் கொடுக்க
அதரம் சுண்டி விடும்...
உன் ஆசை

பதித்த என் முத்தங்களின் ஈரத்தில்
நீ மிதக்க ஆசை...
இதழ் மேல் இதழ் பதித்து
என் வார்த்தைகளின் ஆதாரங்களை
மிச்சமின்றி உறிவாய்!

என்னுள் ஒளித்ததில்
எந்த வார்த்தைகள் உனக்கானது...
எந்த முத்தங்கள் உனக்கானது...
எந்த தொடல்கள் உனக்கானது....
எந்த முனகல்கள் உனக்கானது...
தேடி எடுக்க ப்ரயத்தனப்படும் தேவன் நீ!

உதட்டோரம் ஒளித்து வைத்த முத்தம் தேங்கி
உன் கண்ணை அழைக்க...
கண்ணோரம் ஒளித்து வைத்த முத்தம் சேர்ந்து
உன் உதட்டை அழைக்க...
கண்கூசும் ஒளியாய் இருந்தும் நிறைந்தும் விட்டு
இருட்டை முழுமையாய் போர்த்திவிடுகிறாயே!

மொத்த முத்த கலவையை கேட்டுவாங்கி
என் ப்ரபஞ்சத்தை கவர்ந்திழுத்து
நடுநாயகமாய் அமர்ந்துவிடுகிறாய்...
ஆனந்தம் சேர்க்கிறாய்! அழுகை பரிசளிக்கிறாய்!
வெளி செல்லும் காற்றை என் உதட்டில் இருந்து
மொத்தமாய் கவ்வி எடுக்கிறாய்....

வந்து சேரும் நீ என் சூட்சமம் ஆகி
என் தீவிர செயலாய்
என் ஒளிகற்றையாய்
என் தாப ஏக்கமாய்
கொடுக்கிறாய் உன் சாயல்
தாங்கினேன்!
தாங்குகிறேன்!
தாங்குவேன்!

Friday, December 11, 2009

உச்சதின் மத்தியில்

அவனும் அவளும்

சாத்திய கதவின் பின் அறையில்!

நான்கு கண்களில் நூறு கேள்விகள்....

அவன் அகராதியில்

அவள் ஒரு வீழ்ந்த தேவதை....

அவள் அகராதியில்

அவன் ஒரு புதிய சொல்...

இருவருக்கும் புதிர் இருவருமே....

அவள் கண்கள் நெருப்பு பிழம்பாய்...

அகன்ற விழிகள் கொண்டு

பார்க்கும் அவள் பார்வை

அவனுக்கு புதிய விடுகதை...

மருட்சியா.... திமிரா.....

பிடிப்படவே இல்லை!

அவள் திரண்ட தனங்கள்

அவனுக்கு நினைவில் அலையாய்

கொண்டு வரும் பல காட்சிகள்

இடையும் தொடையும் தொடக்கம் முடிவு

இல்லா சாலை!!!

அவள் அங்குலம் அங்குலமும் அவனிடம் பேசும்

கறுத்து பிளந்த அந்த பேசா இதழ்கள்

விட்டு சென்ற வார்த்தைகளை....

அவள் அவனை உற்று பார்த்து

தேடுகிறாள் ஒரு விடை....

இது வரை கண்ட ஆண்களை

கண நொடியில் கணக்கெடுத்தவள்

இவனிடம் புதிதாய் குழப்பத்தில் மருண்டு....

இது ஆசையா... காதலா... கோபமா..

இவன் எந்த ஜாதி...

கண்கள் காட்டி கொடுக்கும் ஆண்களின் மத்தியில்

இவன் கண்ணோ வேறு வகை

இவள் இதுவரை காணா புதிய இனத்தை சேர்ந்தவன்...

தாழிட்ட அறைக்குள் எது கொணர்ந்தது

அவனையும் அவளையும்

தெரியவில்லை...

தரை முழுக்க கேள்விகள்

பதில் தேடியபடி சிதறி கிடக்க!

கட்டிலில் இருவரும் பக்கம் பக்கம்!

வாக்கியங்கள் குரல்வளையை நெருக்கி நிற்க

எது தொடங்கும் இவர்களின் பயணத்தை.?

மூடி திறக்கும் விழிகளில்

பதில்களும் பசியும் ஒன்றாய் பறிமாற

தொடுகிறாள் அவள் அவனை முதன்முதல்.....

தொட்ட நிமிடம் வார்த்தைகள் இறந்தே விட்டது...

கண்களின் வழியே ததும்பும் அன்பு

நிரப்பியது அறையின் இருட்டை...

விரகம் நங்கூரம் இட்டது...

அவன் கண் வழியே வரும்

காமம் கசிந்ததில் நனைந்து

மேலும் அழகானாள்...

ப்ரபஞ்சத்தை தாண்டிய வெற்றிடமாய் மாறி!

அன்பே அன்பினால்

அன்புக்காக அன்பிடம்

அன்பாய்...

காலம் தொலைந்த தேசத்தில் கரைந்தனர் இருவரும்...

கழுத்தோரம் மெல்ல கோலமிட்டான்...

காதருகே கண் கிறங்கி மூச்சை உள்வாங்கினாள்...

அவன் தேடலில் அவள் இன்னும் மெலிந்து...

தவிக்கவிட்டான்... வரம் தந்தான்...

தவித்து போனாள்... எடுத்து கொண்டாள்...

மெல்ல தொடங்கிய அனல் தகித்தது

வியர்வை வெள்ளம் கரை புரள

அவள் அவனை உண்டாள்...

அவன் அவளை குடித்தான்...

அவள் வலைகளில் சிக்கியவள்...

சிடுக்குகளுடன் அவளை அள்ளி

ஆனந்தமாய் அணிந்தான்..

குழப்பக்குட்டையில் மிதந்த அவள்

கேட்டாள் அவனிடம்...

ஏன் நான்? என்றாள்

என்ன என்னிடம்? என்றாள்

உன் கண் அழைத்தது என்றான்...

சோகம் வழியும் இமை வழியே

எனக்கான காதலும் வழிந்து அழைத்தது என்றான்....

வளைந்து அவன் மனதில் நுழைந்ததில்

இவள் ஒலியானாள்...

நேராய் இவள் கண்ணில் நுழைந்து

அவன் ஒளியானான்...

இருப்பாயோ நீ எப்போதும் என்றாள்

என்ன நடப்பினும் உனக்கான என் காதல்

எப்போதும் உனக்கு மட்டும் தான் என்றான்...

கண் வழி சிரிப்பும் கண்ணீரும் கலந்து

உச்சத்தின் மத்தியில்...

இருவரும் இறந்து...



Saturday, December 5, 2009

என் இரவுகளில் !

தகிக்கும் தொடல்களின்
வெப்பத்தில் மெல்ல மெல்ல உருகும் நேரம்!
நொடிகள் தீய்ந்து நிமிடங்களாய்...
நிமிடங்கள் கருகி மணி கூறுகளாய் ...
மணிகளும் பொசுங்கி நாட்களாய்...
காணாமல் மெதுவாய் போய்கொண்டே இருக்க!
படுக்கையில் பரந்து நான் கிடப்பேன்
என் மேல் பட்டாம்பூச்சியின் சிறகாய் மாறி நீ...

கொல்வாயோ? கொடுப்பாயோ?
இருப்பாயோ? பறப்பாயோ?
பனிக்கட்டியின் வெப்பத்தில்
புகையாய் உருகும் நீர்த்துளியாய்
நீயும் நானும்!
இங்கு கலந்து எங்கும் படர்ந்து
கரைவோம் சட்டென....

ஓடியும் நேரக்கிளைகளில்
காயத்துடிக்கும் மலராய் நாம்...
நடுநிசி பொழுதுகள்
ஒரு வலியில் தொடங்கி
ஒரு வலியில் முடியும்...
இன்றையும் நாளையும் தாண்டி
நம் எல்லாமே மாயம் ஆக!
என் நெஞ்சுக்கூட்டில் ஒளித்து
வைத்திருக்கும் மயிலிறகாய்
இக்கணங்கள்...
கண்ணின் பின்திரையில்
நீ உறங்கும் இந்நொடி
அழியா படமாய்...

கடைசியில் எஞ்சி கையில்
உறுத்தும் சில மிச்சங்கள்
உன் முத்தத்தின் காய்ந்த ஈரமும்!
என் கண்களின் சிவப்பும்!
கரைந்து போன கண்ணீரின் கரிப்பும்!
காயமாய் நீ விட்டு போன தடங்களும்...

தேடி தேடி சேர்த்து வைக்கும் என் மனது
நீ சென்ற சுவட்டை!
ஆனால் மறந்தே போகும் நீ போன வழி...
இந்த நினைவு மூட்டைகள் மட்டும்
என்னோடு சுகமான முடிச்சாய்...
தொக்கி கொண்டு வரும்
என் இறுதி வரை....

சிறு கூட்டு புழுவாய் இருந்த போது
நம் நெருக்கம்...
அதை நீ பறந்தும் மறந்தும்
போக நேரும், என் கண்ணே!
நீ வண்ணகரைசலில் மூழ்கி
காற்று கயிர் ஏறி பறக்கும் உயிராய்...
என் கைகளை விட்டு வெகு தூரம் கொண்டு செல்லும்
உன் சிறகுகள் கண்டு எனக்கு ஆனந்தம் தான்....
ஆயினும்
கையோடு என்றும் இருக்கும் நீ இருந்த கூடு
நடந்தது நிஜம் தானென்று உறுத்திய படி....